ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்
ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்

ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
Published on

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 4 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். மேலும், அவா்களது விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனா்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இதனால், மீன்பிடி இறங்குதளத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் முன் 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது, சிலா் மயக்கமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com