சிவகங்கை மாவட்டம் கலியாந்தூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமை யாசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்ய தவறினால் வரும் கல்வி ஆண்டு முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
கலியாந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆட்சியரிடம் பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியதாவது, தற்போது பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை. அவ்வாறு வந்தாலும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில்லை, மேலும்,தற்போது செயல்படும் நடுநிலைப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இவைதவிர, பள்ளிக்கு வரும் அரசு நிதியை கையாடல் செய்து வருகின்றார். ஆகவே, கலியாந்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது பணியாற்றும் தலைமையாசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் வரும் கல்வி ஆண்டு முதல் அப்பள்ளிக்கு எங்களது குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என அதில் தெரிவித்துள்ளனர்.