ஏலச்சீட்டு பிடித்து,அதிக பணப்பலன் திருப்பி தருவதாகக் கூறி ரூ.52 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்த இருவரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலைச் சேர்ந்த முத்து மனைவி சாரதா(34). இவர், இளையான்குடி அருகே அண்டக்குடி புதூரைச் சேர்ந்த அருளானந்து மனைவி தனசெல்வி(35), வாணி கிராமத்தைச் சேர்ந்த அற்புதம் மகன் அரோக்கியசாமி(39)ஆகியோரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் ஏலச்சீட்டு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சீட்டின் குறிப்பிட்ட தேதி நிறைவு பெற்றதையடுத்து தொகையை சாரதா கேட்டுள்ளார். இதற்கு தனசெல்வி, ஆரோக்கியச்சாமி ஆகியோர் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து சாரதா கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரமாணிக்கம்,சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன்,காவலர் அந்தோணிஜீலியா ஆகியோர் விசாரனை செய்தனர். விசாரனையில்,தனசெல்வி, ஆரோக்கியச்சாமி ஆகிய இருவரும் காளையார்கோயிலைச் சேர்ந்த சாரதா உள்ளிட்ட 12 பேரிடம் ஏலச்சீட்டு பிடித்து, அதிக பணம் திருப்பி தருவதாகக் கூறி ரூ.52 லட்சத்து 50ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.