சிவகங்கை கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே தடகளப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் இப்போட்டியை சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன்(பொறுப்பு) முன்னிலை வகித்தார்.
இதில், நீளம், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்டப் போட்டிகளில் சிவகங்கை கல்வி மாவட்ட அளவில் உள்ள 46 பள்ளிகளிலிருந்து 212 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை மானாமதுரை உடற்கல்வி இயக்குநர் பூவேந்தன், மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோ.பாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியைகள் ரோஜி, ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.