இணையதளத்தில் பெறப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையுடையதா? என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகம் சார்பில் டீ-ஸ்பேஸ் என்ற மென்பொருளை வைத்து முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளை மின்னணு ஆய்வறிக்கைகளாக மாற்றுவது பற்றிய தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில் தலைமைவகித்து துணைவேந்தர் பேசியது: மாணவர்கள் தங்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறையிலிருக்கும் பொழுது பல நூல்களை எழுதினார்.
மூலதனம் என்ற நூலை எழுதிய கார்ல்மார்க்ஸ் பிரிட்டிஷ் நூலகத்தில் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார்.
இன்றளவும் அவர் பயன்படுத்திய நாற்காலி கார்ல்மார்க்ஸ் பயன்படுத்திய நாற்காலி என்று அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஆராய்ச்சி மாணவர்கள் பல கல்வி நிறுவனங்களுக்குச்சென்று நூல்களைப் படித்து பார்த்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை சேகரித்தனர்.
ஆனால் இன்றோ இணையதளம் மூலம் எல்லாத் தகவல்களையும் பெறமுடிகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மதிப்பு மிக்கதா, நம்பகத்தன்மையுடையதா என்பதை மாணவர்கள் தெரிந்துகொள் வது அவசியம். நூலகங்களில் புத்தகங்கள், இதழ்கள் மற்றும் ஆய்வறிக்கை பேன்றவைகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கு நூலகர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
விழாவில் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன நூலகர் கே. இளவழகன் வாழ்த்திப் பேசினார். முன்னதாக கருத்தரங்க செயலாளர் பெ. கணேசன் வரவேற்றார். பல்கலைக்கழக மைய நூலகர் அ. திருநாவுக்கரசு நன்றி கூறினார்.