சிவகங்கை அருகே வியாழக்கிழமை இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (45). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடையின் பின்னால் குடியிருந்து வரும் அவர், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் சில சிகரெட் பண்டல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
திருடப்பட்ட கல்லாவின் கீழே இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் மர்ம நபர்களின் கண்ணில் படாமல் தப்பின. இதுகுறித்த சிவகங்கை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.