சிவகங்கை ரயில் நிலையத்தில் உள்ள மேற்கூரை மீது ஏறி மரம் வெட்டிய போது, கூரை இடிந்து கீழே விழுந்த ரயில்வே ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பாண்டி(40). இவர் இருப்புப் பாதைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிவகங்கை ரயில் நிலையத்தின் உள்ளே இருந்த மேற்கூரை மீது ஏறி, ரயில் தடம் வரை படர்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மேற்கூரை இடிந்து பாண்டி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பாண்டியை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே போலீஸார் பாண்டியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.