90 சதவீத மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கல்லல் அருகே உள்ள கருகுடி கிராமத்தில் சிவகங்கை மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயி ஒருவர் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் (சோலார் திட்டம்) பொருத்தப்பட்டு விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்ததாவது:
வேளாண் பணிகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சூரிய ஒளியின் பயன்பாட்டை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில், வேளாண் பொறியியல் துறை மூலம் 90 சதவீதம் மானிய விலையில் சோலார் மோட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூரியஒளி மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டார் வழங்கக் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு விரைவில் மோட்டார் வழங்கப்படும்.
மேலும், இத்திட்டம் தொடர்பான விளக்கங்களை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் விவசாயிகள் பெற்று மோட்டார் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
அப்போது வேளாண்மைத் துறை துணை இயக்குநர் இளங்கோவன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.