சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 67 பயனாளிகளுக்கு ரூ.25,21,270 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
இதில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 67 பேருக்கு ரூ.25,21,270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது: சிவகங்கை மாவட்டத்தில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை வழங்க 41 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளித்து தலா ரூ.58,850 மதிப்பீட்டில் விலையில்லா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 26 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, கருப்புக் கண்ணாடி, ஊன்றுகோல், தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கை கை, கால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சி மற்றும் வங்கிக் கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.ஆகவே அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் சரவணக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், பாண்டி, ஜெயப்பிரகாஷ், ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.