சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் படைப்பரங்கம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற படைப்பரங்கக் கூட்டத்திற்கு தேவகோட்டை கிளை மூத்த நிர்வாகி போஸ் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயமுருகன், சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சங்கத்தின் மாவட்டச் செயலர் சங்கர சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதி சுந்தரேசன் தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு குறித்து பேசினார். முத்தாத்தாள் நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ சமூக முன்னேற்றத்திற்கான கதை கூறினார். அப்பள்ளியின் மாணவி சரண்யா தமிழர்களின் ஆதி இசைக் கருவியான பறை குறித்து கிராமியப் பாடல் மூலம் விளக்கினார். பெத்தாள் ஆச்சி பள்ளி மாணவி அபிராமி தாயின் பெருமை குறித்து பாடினார்.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் புதல்வி முனைவர்.தேவி நாச்சியப்பன் எழுதிய பேசியது கை பேசி' எனும் நூலைத் திறனாய்வு செய்து தே பிரித்தோ பள்ளியின் கணித ஆசிரியர் செபாஸ்டின் ராஜேந்திரன் மதிப்புரை வழங்கினார். முன்னதாக கிளைச் செயலர் அன்பரசன் வரவேற்றார். கிளைப் பொருளாளர் சக்கரவர்த்தி ஜெயபால் நன்றி கூறினார்.