மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார்.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோரை ஆதரித்து செந்தில் பேசியதாவது: ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த அரசு நீடித்தால் மனைவியுடன் பேசுவதற்கும் வரி போடும் நிலை உருவாகும். மோடி அரசு அதிமுக அரசை ஆட்டுவிக்கிறது.
தமிழகத்திலிருந்து தில்லி சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் மோடி அரசு பேசி கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற மோடி வரவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார்.
இவருக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் விலைவாசி அதிகரித்துவிட்டது. இந்த ஆட்சிகள் தொடர்ந்தால் விலைவாசி இன்னும் உயரும் என்றார்.
இப் பிரசாரத்தில் அமமுக மானாமதுரை நகரச் செயலாளர் கோபால், ஒன்றியச் செயலாளர்கள் சரவணன், வேலுச்சாமி, வழக்குரைஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் குரு.முருகாணந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.