காரைக்குடி கவிமணி குழந்தைகள் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா குழந்தைக்கவிஞர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில், குழந்தைகள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும், ஏப்ரல் மாதம் பிறந்த சங்க உறுப்பினர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் பாடல்கள், கதைகள் கூறினர். தமிழ்நாடு அரசின் விருது மற்றும் கலைமாமணி விருதுபெற்ற பேராசிரியர் அய்க்கண், 2018 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற பேராசிரியர் சே. குமரப்பன் ஆகியோரைப் பாராட்டி பேராசிரியர் கரு. முத்தையா பேசினார். பின்னர் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பனாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சங்க அமைப்பாளர் தேவி நாச்சியப்பன் வரவேற்றுப் பேசினார். முடிவில் துணை அமைப்பாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.