வைகையாற்றுக்குள் மணல் குவாரிகள் குவாரிகள் அமைக்கவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என மானாமதுரை அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி கூறினார்.
இளையான்குடி ஒன்றியத்தில் குமாரகுறிச்சி, பிராமணக்குறிச்சி, ஆழிமதுரை, சுந்தனேந்தல், குணப்பனேந்தல், இளமனூர், பெரும்பச்சேரி, கீழாய்குடி, வழக்காணி, வாணி உள்பட 25 கிராமங்களிலும் மானாமதுரை ஒன்றியத்தில் கொன்னக்குளம், மணக்குளம், சமத்துவபுரம், செய்களத்தூர், குருந்தன்குளம், நவத்தாவு, குலையனூர், நத்தபுரக்கி, வலசை, கள்ளர்வலசை, கண்மாய்பட்டி உள்பட 20 கிராமங்களில் திங்கள்கிழமை அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களில் தேர்தல் முடிந்ததும் வைகையாற்றுக்குள் மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இக் குவாரிகளை அமைத்தால் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே மணல் குவாரிகள் அமைக்கவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். அவருடன் அமமுக மானாமதுரை, இளையான்குடி பகுதி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பிரமாண்ட பேரணி நடத்த திட்டம்: தேர்தல் பிரசாரம் செவ்வாய்கிழமை மாலையுடன் நிறைவடைவதால் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக, அமமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் கட்சியினரையும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களையும் திரட்டி திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டப் பேரணிகளை நடத்தி பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.