சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் 3 பேர், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சென்னை மண்டல அளவிலான நீச்சல் போட்டி, கடலுôர் மாவட்டம் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து 7 மாணவிகள், 4 மாணவர்கள் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர்.
இதில், தனி நபர் பிரிவில் சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் கங்கேஸ்லிங்கம், ரிஸி, மலர் மன்னன், சிவராமன் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். இதே போன்று,மாணவிகள் நேத்ரா, சண்முகப்பிரியா, ஷரிகா ஆகியோர் தனிநபர் பிரிவுகளில் வெற்றிப் பெற்று வரும் ஜூன் மாதம் புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்களான பால்பாண்டிதுரை, மாவட்ட நீச்சல் கழகத் தலைவர் ஜெயதாஸ்முனியாண்டி, செயலர் குமார்,இணைச் செயலர் சந்திரமோகன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.