காரைக்குடியில் நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இந்தியன் குரல் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி, மனு எழுதுதல் ஆகியவை குறித்த பயிற்சி முகாம் கார்த்திகேயன் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவில், நமது உரிமைப் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரகாஷ் தலைமை வகித்துப் பேசினார். கார்த்திகேயன் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சுவேதா, நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மோகன் ஆகியோர் பயிற்சியளித்தனர். அதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்கள் எழுதப்பட்டன. முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நமது உரிமைப் பாதுகாப்பு இயக்க ஆலோசகர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். காரைக்குடி தாலுகா சட்டப்பிரிவு செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.