சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் திங்கள்கிழமை கால்நடைபட்டி திறக்கப்பட்டது.
பூலாங்குறிச்சியில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளையும் வயல்வெளித் தோட்டங்களில் அத்துமீறி நுழையும் ஆடு, மாடுகளையும் பிடித்து அடைக்கும் பொருட்டு கால்நடைபட்டி அமைக்கப்பட்டது.
இதனை தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் திறந்து வைத்து தொட்டி மற்றும் தண்ணீர் வசதிகள் குறித்துப் பார்வையிட்டார். மேலும் இப்பட்டியில் அடைக்கப்படும் ஆடு, மாடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பர்ணபாஸ் அந்தோணி, மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் கிராம மக்களிடம் நாட்டு வாய்க்கால்கள் மற்றும் குளங்களுக்குச் செல்லும் பாதைகள் சீர் திருத்தங்கள் குறித்து கேட்டறிந்தார். அருகில் உள்ள ஊருணியின் சுற்றுச்சுவர் பாதிப்பையும் பார்வையிட்டு அதனை சரிசெய்யும் பொருட்டு வருவாய்த்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.