சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (ஆக.10) பொது விநியோக குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை (ஆக.10) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
அந்தந்த வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார் -பதிவாளர்கள் உள்ளிட்ட பொது விநியோக திட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் கீழக்கண்டனி, மானாமதுரை வட்டம் தே.புதுக்கோட்டை, இளையான்குடி வட்டம் முள்ளியரேந்தல், காரைக்குடி வட்டம் ஆலங்குடி, தேவகோட்டை வட்டம் போராட்டுக்கோட்டை,திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சி, திருப்புவனம் வட்டம் மணலூர், காளையார்கோவில் வட்டம் சோழவந்தான்,சிங்கம்புணரி வட்டம் கீழவயல்.