குறைந்த அளவு கார்பன் வெளியிடும் பசுமை வேதியியலுக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்று, காரைக்குடி செக்ரி இயக்குநர் என். கலைச்செல்வி வலியுறுத்தினார்.
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியின் உயிரிதொழில்நுட்பவியல், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், நுண்ணுயிரியல், மருத்துவ ஆய்வக நுட்பவியல் ஆகிய துறைகள் சார்பில், "வளர்ந்து வரும் நோய் மேலாண்மை மற்றும் ஆற்றல் நுட்பவியல்' என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கம் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை தொடக்கி வைத்தும், கருத்தரங்க ஆய்வு அறிக்கைகளின் சுருக்க இதழை வெளியிட்டும், செக்ரி இயக்குநர் கலைச்செல்வி பேசியதாவது: மின்வேதியியல் என்ற பசுமை வேதியியலே மிகக்குறைந்த கார்பனை வெளியிடுகிறது. இத் தொழில்நுட்பமே இன்றைய உலகுக்கு தேவையான ஒன்று. இதன்மூலம், தரமான குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை முறை மற்றும் குறைந்த கார்பன் பயன்பாடு ஆகியவற்றை வழங்க முடியும். எனவே, அனைவரும் இந்த பசுமை வேதியியலுக்கு திரும்ப வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறைத் தலைவர் ஜெ. ஜெயகாந்தன், புரத அமைப்பு நிர்ணயம் மற்றும் மருத்துவ வடிமைப்பில் அதன் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சவூதி அரேபியா கிங்காலிகாட் பல்கலைக்கழகப் பேராசிரியர் குமரப்பன், சோளத்தில் உள்ள அதிக பிரக்டோஸ்பாகினை உயிரினங்கள் உட்கிரகிப்பதால் ஏற்படும் வளர் சிதை மாற்ற அறிகுறிகளின் விளைவுகளை விளக்கினார்.
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் ரவிதாஸ், காரைக்குடி செக்ரி மின்வேதியியல் பொருள் அறிவியல் பிரிவு முதன்மை விஞ்ஞானி சுப்பிரமணியன், சென்னை டாக்டர் மு.ஆ. செரியன்ஸ் இருதயம் ஃபவுண்டேஷன் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் ஜெமிமா கிங்ஸ்லே ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கருத்தரங்கில், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிறைவு நாள் விழாவில், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில், 400 மாணவிகள், 100 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் துறைத் தலைவர்கள் சித்ரா, மீனாட்சி, ஈஸ்வரபிரியா மற்றும் மாணவியர் செய்திருந்தனர்.
முன்னதாக, கல்லூரியின் முதல்வர் எஸ். ஜெயஸ்ரீ வரவேற்றுப் பேசினார். முடிவில், இயற்பியல் துறைத் தலைவர் ஆ.மீனாட்சி நன்றி கூறினார்.