சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவையொட்டி தேர்பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கை நகர் நுழைவு தோரணவாயில் அருகே உள்ள இப்பேராலய திருவிழா கடந்த ஆக. 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவைத் தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்கவும் ஜெபமாலை, நவநாள் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி ஆகியன தினசரி மாலை பேராலயத்தில் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை திருப்பலி, தேர்பவனி புதன்கிழமை (ஆக. 14) இரவு நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அ.லூர்து ராஜா தலைமை வகித்து, தேர்பவனியை தொடக்கி வைத்தார்.
ஆலயத்தின் முன்பு தொடங்கிய தேர்பவனி, மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை, சத்திய மூர்த்தி தெரு, காந்தி வீதி, மரக்கடை வீதி, அரண்மனை வாசல், பேருந்து நிலையம், நேரு கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது.
இதில், புனித அலங்கார அன்னை பேராலயத்தின் பங்கு தந்தை மரியடெல்லஸ், பங்குப் பேரவையினர் உள்பட சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.