சிவகங்கையில் வணிக வரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள வணிக வரித் துறை அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு உதவி ஆணையர், வணிக வரி அலுவலர்,துணை வணிக வரி அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருக்கோட்டைத்தரசன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா.நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் மு.அன்புச் செல்வன் சிறப்புரையாற்றினார்.
இதில் வணிக வரித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து தற்காலிக பட்டியலாக வெளியிடாமல், நிரந்தர பட்டியலை வெளியிட முன் வர வேண்டும். வணிக வரித் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கையில் குறைபாடுகளை நீக்கி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதுநிலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.