சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள், ஒரு டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருப்புவனம் போலீஸ் சரகம் பொட்டப்பாளையம் பகுதியில் கால்வாய்க்குள் மணல் அள்ளி மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி திருப்புவனம் போலீஸார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மதுரை மாவட்ட எல்லையான பொட்டப்பாளையம் கிராமத்தில் மணல் கடத்தி வந்த 12 மாட்டு வண்டிகள் ஒரு டிப்பர் லாரியை மறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் மாட்டு வண்டிகளையும், லாரியையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வண்டிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.