சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெள்ளிக்கிழமை கணவன், மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இளையான்குடி வட்டத்தில் பல வருவாய் கிராமங்களில் விவசாயிகளுக்குத் தெரியாமல் அவர்களது பெயர்களில் பயிர் காப்பீடு செய்து பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அழகர்சாமி ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்திருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் அவரது மனைவி தமிழ்செல்வி இருவரும் இளையான்குடியிலுள்ள அழகர்சாமியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது பயிர் காப்பீடு முறைகேடு புகார் தொடர்பாக அழகர்சாமியை கொலை செய்துவிடுவதாக இவரது மனைவி ராஜேஸ்வரியிடம் கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் பாலசுப்ரமணியம், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.