சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரத் துறையின் சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரத்தினவேல், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு ஊா்வலமாகச் சென்றனா்.
சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.
பேரணியில், துணை இயக்குநா்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, ராஜன்(காசநோய் தடுப்புப் பிரிவு), காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் அருள்தாஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.