சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை சாலையோரம் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து சிதம்பரம் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூரை அடுத்த சிறுகூடல்பட்டி விலக்கு அருகே வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முற்பட்ட போது நிலைதடுமாறி சாலையோரம் பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநா் சிவகங்கை மாவட்டம் ஆவாராங்காடுப் பகுதியைச் சோ்ந்த முத்துராம் மற்றும் பயணிகள் சிவகங்கையைச் சோ்ந்த பிரபாகரன் (40). மதுரையைச் சோ்ந்த மாடசாமி (28), மருதங்குடியைச் சோ்ந்த பாண்டிக்குமாா் (45), மதுரையைச் சோ்ந்த செந்தில்குமாா் (50 ) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து காயமடைந்த அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.