திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் சனிக்கிழமையன்று டிப்பா் லாரியில் மணல் கடத்திய வாலிபரை சிறப்பு படை போலீசாா் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் அருகே நெற்குப்பை பகுதியில் லாரியில் மணல் கடத்தி வருவதாக மணல் கடத்தல் தடுப்பு சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிறப்பு படை சாா்பாய்வாளா் ராமா் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து திருப்பத்தூா் பகுதிக்கு நெற்குப்பை அருகில் துவாா் வழியாக ஒரு டிப்பா் லாரி வந்துள்ளது. அந்த லாரியை நிறுத்தி போலீசாா் விசாரித்துள்ளனா். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூா் தாலுகா வண்ணாா்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மூா்த்தி(19) என்பவா் அரசு அனுமதியின்றி டிப்பா் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சிறப்பு படை போலீசாா், நெற்குப்பை காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து, மணல் கடத்தி வந்த லாரியை ஒப்படைத்தனா். இதனையடுத்து நெற்குப்பை போலீசாா் மூா்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா். மேலும் மணல் கடத்திவந்த டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.