காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உயிரி தகவலியல் துறை சார்பில், தேசிய அளவிலான 4 நாள் கருத்தரங்கத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்டமைப்பு உயிரி தகவலியல் மற்றும் கணினி சார் மருந்து கண்டறிதலில் நவீன உத்திகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்த இக்கருத்தரங்குக்கு, துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்தார். பின்னர், அவர் விழா மலரை வெளிட்டு பேசியதாவது:
இங்குள்ள உயிரி தகவலியல் துறையின் பங்களிப்பு பல்கலைக்கழகத்தின் தர வரிசைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. உயிரியல் துறைகளின் கண்டுபிடிப்புகள், மருத்துவம் மற்றும் மனித வாழ்க்கையின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகிறது என்றார்.
இதில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டி.பி.சிங் கருத்துரையாற்றினார். கொல்கத்தா போஸ் நிறுவனத்தின் பேராசிரியர் பினக்பாணி சக்கரபர்த்தி, புதுதில்லி தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பேராசிரியர் ஜி.பி.எஸ். ராகவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் தே. வேல்முருகன் வாழ்த்திப் பேசினார். 4 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில், தலைசிறந்த உயிரி தகவலியல் அறிவியல் அறிஞர்கள் 19 பேர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக, கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் குமார் சிங் வரவேற்றார். முடிவில், உதவிப் பேராசிரியர் மு. கார்த்திகேயன் நன்றி கூறினார்.