இளையான்குடி நகர் கூட்டுறவு வங்கித் தேர்தலில் திமுக அணி வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கூட்டுறவு வங்கித் தேர்தலில் திமுக அணியை சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்று, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது, இளையான்குடி நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெறாத கூட்டுறவு அமைப்புகளுக்கு, வாக்கு எண்ணிக்கை நடத்த தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இளையான்குடி நகர கூட்டுறவு வங்கியில் வாக்குகள் எண்ணப்படவில்லை. பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வங்கியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுகவை சேர்ந்த செல்லம்மாள், குமார், சரோஜ்பானு, சபீதாபேகம், செல்வி, அப்துல் ரசாக், பாலசுப்ரமணியன், முகமது ஆரிப், நஜீமுதீன், நாசர், செய்யதுகான் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, திமுக இளையான்குடி மேற்கு ஒன்றியச் செயலர் சுப. மதியசரன், துணைச் செயலர் மலைமேகு, மாவட்டப் பிரதிநிதி கருணாகரன், காங்கிரஸ் கட்சி அல்அமீன் உள்பட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.