சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே கருவேல்குறிச்சியில், மூதாட்டியிடம் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
கருவேல்குறிச்சியைச் சேர்ந்தவர் நீதிபதி என்பவரின் மனைவி சுந்தரவள்ளி (60). இவர் தனது கிராமத்துக்கு அருகேயுள்ள எம்.புதூரில் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்துவிட்டு, மதியம் தனது ஊர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, மூதாட்டியை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரிடம் பிள்ளையார்பட்டிக்கு வழி கேட்டுள்ளனர்.
திடீரென இருவரும் இரு சக்கர வாகனத்தை விட்டு இறங்குவதைப் பார்த்த சுந்தரவள்ளி வேகமாக நடக்க முயற்சித்துள்ளார். ஆனாலும், அவர்கள் இருவரும் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த திருக்கோஷ்டியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மூதாட்டியிடம் விசாரித்தனர். பின்னர், வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
பேருந்தில் திருட்டு: திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி அனுசியா. இவர், அரசுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூரிலிருந்து ஊர்குளத்தான்பட்டிக்குச் சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது கைப்பையை தேடியபோது காணவில்லையாம். அதில், 5 பவுன் நகைகள் மற்றும் ஏ.டி.எம். அட்டை ஆகியன இருந்துள்ளன. இது குறித்து அனுசியா அளித்த புகாரின்பேரில், கண்டவராயன்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.