மதுரையில் பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(43). தேனியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தேனி சென்றார். விசேஷம் முடிந்ததை அடுத்து பேருந்தில் மதுரைக்கு வந்துள்ளார். பாதுகாப்பு கருதி மனைவி அணிந்திருந்த 19 பவுன் நகைகளை பையில் வைத்துள்ளார். இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.