வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை மக்கள் புறக்கணிப்பர் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் அம்மா பேரவைச் செயலரும், மக்களவைத் தொகுதி மண்டலப் பொறுப்பாளருமான எஸ். மாரியப்பன் கென்னடி, அமைப்புச் செயலர் இ.ஏ. ரெத்தினசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், தங்க. தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: மத்திய-மாநில அரசுகளின் பட்ஜெட், திட்டங்கள் இல்லாத பட்ஜெட். மத்திய அரசின் பட்ஜெட் தேர்தலை கருத்தில்கொண்டது.
தமிழகத்தின் மீதுள்ள ரூ. 4 லட்சம் கோடி கடனுக்கு தமிழக பட்ஜெட்டில் எந்த தீர்வும் கூறப்படவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவையும், பாஜகவையும் மக்கள் புறக்கணிப்பர். நிதிநிலை குறித்து, தமிழக அரசு சட்டப் பேரவையில் விளக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், கடைசி நேரத்தில் அமமுக சார்பில் நல்லதொரு கூட்டணி அமையும்.
மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டை மக்களவையிலேயே குறை கூறிய துணைத் தலைவர் தம்பிதுரை மீது அதிமுக நடவடிக்கை எடுக்குமா? என்றார்.
முன்னதாக, கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலர் கே.கே. உமாதேவன் வரவேற்றார். கழக அமைப்புச் செயலர் சோழன் சித. பழனிச்சாமி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சுப்பிரமணியன், மகளிரணி துணைச் செயலர் எஸ். விஜயா, வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் அன்பரசன், இளைஞர் பாசறை இணைச் செயலர் அந்தோனிராஜ், குரு. முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி ஆகிய தொகுதிகளுக்குள்பட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட நெசவாளர் அணி செயலர் ஆர். சோமசுந்தரம் நன்றி கூறினார்.