காரைக்குடி அருகே மாத்தூரில் நகரத்தார்களின் 9 கோயில்களில் ஒன்றான ஐந்நூற்றீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத் திருவிழாத் தேரோட்டம் பிப். 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
மாத்தூர் பெரியநாயகி அம்பாள் உடனுறை ஐந்நூற்றீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை காலையில் கேடகத்தில் சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். மாலையில் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) மாலையில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பிப்ரவரி 18-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக அன்று காலை 9 மணியளவில் தேருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மாசி மகம் நட்சத்திரமான பிப்ரவரி 19 அன்று காலை 8 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாத்தூர் நகரத்தார்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.