காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர், மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றமைக்காக, அவருக்கு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி தடகள அமைப்பு சார்பில், மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள், தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஜெ. மைக்கேல் வில்சன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவரை, கல்லூரி நிர்வாகம், முதல்வர் என். பழனிச்சாமி, உடற்கல்வி இயக்குநர் எஸ்.வீரமணிகண்டன் மற்றும் ஆசிரியர், அலுவலக, பணிமனைப் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.