சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி-சோமநாதர் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, இரவு கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இதையொட்டி, ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் திருமணக் கோலத்தில் அம்மன் சன்னதி முன்மண்டபத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளினர்.
அங்கு, திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மேளதாளங்கள் முழங்க இரவு 7 மணிக்கு சோமநாதர் சுவாமி சார்பில், ஆனந்தவல்லி அம்மனுக்கும், பிரியாவிடைக்கும் சிவாச்சாரியார்கள் திருமாங்கல்ய நாண் அணிவித்து, திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர்.
அதையடுத்து, அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. ஆனந்தவல்லியும், சோமநாதர் சுவாமியும் இரு விருஷப வாகனங்களில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்தனர். மக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக அம்மனையும், சுவாமியையும் வரவேற்று பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.