சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை கால்நடை பராமரிப்பு உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் குமார்(42) . அவ்வூரின் கோடியான்தோப்புப் பகுதியில் குடியிருந்து வரும் இவர் திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு உதவியாளராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 15 நாள்களாக விடுப்பில் இருந்த இவர் செவ்வாய்க்கிழமை பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை சக பணியாளர் முருகானந்தம் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது, அலுவலகத்திற்கு உள்ளே இரும்பு வளையத்தில் கயிற்றில் குமார் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
தகவலறிந்த திருப்பத்தூர் நகர் போலீஸார் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தி, இறந்த குமாரின் மனைவி பாண்டிதேவியிடம் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப பிரச்னை காரணமாக குமார் இறந்திருப்பது தெரிய வந்தது.
எனினும் அலுவலகத்திற்குள்ளேயே இறந்ததால் கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் முருகேசன், உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.