சிவகங்கையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் திருச்சி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
துபையிலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சிவகங்கை மாவட்டம் கொட்டக்குடி அய்யாசாமி மகன் பாலமுருகன்(26) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் மதகுப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கையில் ஆஜராகாமல் துபைக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அனைத்து விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிடிபட்ட பாலமுருகனை அதிகாரிகள் திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்து சிவகங்கை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திருச்சி வந்து பாலமுருகனை கைது செய்து அழைத்து சென்றனர்.