காளையார்கோவில் அருகே சனிக்கிழமை மாலை தனியார் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காளையார்கோவில் அருகே நானாமடை கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் வசுவதி (12). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை பள்ளியை முடித்து விட்டு வசுவதி, தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சாலையின் குறுக்கே ஆடு வந்ததால், இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து வசுவதி மீது மோதி, அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காளையார்கோவில் போலீஸார் வசுவதியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் காளையார்கோவில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.