சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாட்டுப் பொங்கலையொட்டி புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இங்குள்ள சீரணி அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள பழமையான தொழுவுக்கு அவ்வூரின் பிரசித்தி பெற்ற கோயிலான சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த காளைகள் கொண்டுவரப்பட்டு அக்காளைகளுக்கு வேட்டி, துண்டுகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர்
பகல் 2 .30 மணிக்கு தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
அதற்கு முன் கட்டுமாடுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காளைகளை பிடிக்க முயன்றனர்.
இதில் சுற்றுப்புற கிராமங்களான பட்டகோயில்களம், கோவில்பட்டி, சிவபுரிபட்டி, அணைக்கரப்பட்டி, மலம்பட்டி, கொடுக்கம்பட்டி, நாட்டார்மங்கலம், பனையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 200 க்கு மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இம்மஞ்சுவிரட்டில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.