சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கோடிக்கரை உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் வேளாரேந்தல் விலக்கு அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்கு மாராந்தை, தெற்கு மாராந்தை,கோடிக்கரை, இலந்தங்கரை, கவளி மண்டபம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து தினசரி அதிகாலை 5.30 மணிக்கும், இரவு 9 மணிக்கும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் ,பகல் நேரங்களில் அப்பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் தங்களுக்கு அன்றாட தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்கும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கும் வெளியூர் செல்ல சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள வேளாரேந்தல், சூரணாம், மறவமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் ஏறிச் சென்று வருகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து,சிவகங்கையிலிருந்து கோடிக்கரை வழியாக சூராணத்துக்கு பகல் நேரங்களில் அரசு பேருந்து இயக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் களையார்கோவில்-இளையான்குடி சாலையில் வேளாரேந்தல் விலக்கு அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகுரு, காளையார்கோவில் காவல் நிலைய சார்பு- ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இப்பகுதிக்கு பகல் நேரங்களில் அரசு பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.