அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது, புதிதாக தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது, அப்பணியிடத்துக்கு மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.