சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே திங்கள்கிழமை இரவு வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். பெண்கள் உள்பட 20 காயமடைந்தனர்.
சிவகங்கை அருகே பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 21 பேர் பூவந்தியை அடுத்த திருமாஞ்சோலை அருகே செம்பூர் கிராமத்தில் தனியார் இடத்தில் கருவேல மரங்கள் வெட்டும் வேலை செய்துள்ளனர். மாலையில் வேலை முடிந்து சரக்கு வேனில் பாசாங்கரை கிராமத்துக்கு திரும்பியுள்ளனர். கார்த்தி என்பவர் வேனை ஓட்டி வந்தார். படமாத்தூர் விலக்கு அருகே வேன் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அதில் வந்த பெண்கள் உள்பட 21 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் பாண்டியம்மாள்(35) உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூவந்தி போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.