சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மரக்குளம்,விளங்குளம், அன்னிவயல், மாராத்தூர் உள்பட ஏராளமான கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களாக தண்ணீர் விநியோகம் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காளையார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காளையார்கோவில் ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ள பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அது தொடர்பான மனுவை வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலரிடம் வழங்கினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.