சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் சேதமடைந்த கிராமச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி ஒன்றியம் அதிக கிராமங்களை கொண்டதாகும். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு தேவைக்கும் இளையான்குடி சென்று வருகின்றனர். ஆனால் இளையான்குடியிலிருந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் கற்கள் பெயர்ந்து சாலை இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் உள்ளன. பல சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இச்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இளையான்குடியிலிருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு மேட்டுச்சாத்தமங்கலம், முடவேலி, குண்டுகுளம், கொடிமங்கலம், நாகமுகுந்தன்குடி, ஆர்.கே.நகர், இட்டிசேரி, புதுக்குளம் வழியாக செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இதேபோல் இளையான்குடி சாலையிலிருந்து அரியமங்கலம், மேலத்துறையூர், பொன்னியேந்தல், வண்ணாரவயல் சாலை வழியாக செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் அடிக்கடி மனுக் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து இந்த கிராமச் சாலைகளை சீரமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.