சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 65-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா ஆனி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினசரி காலை, மாலை ஆகிய வேளைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, முக்கிய விழாவான பூச்சொரிதல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள்ப் பொடி, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர், கையில் குழந்தையுடன் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், பிள்ளைத் தொட்டி கட்டியும் வழிபட்டனர்.