சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பூப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இக் கோயில் ஆனித் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூப்பல்லக்கு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ஐந்தாம் மண்டகப்படிதாரர்களான முறையூர் வணிகர் நலச் சங்கத்தின் 75 ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்ச்சியாக இப்பூப்பல்லக்கு விழா நடைபெற்றது.
இதில் வண்ண மலர்கள் மற்றும் அலங்கார மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூப் பல்லக்கில் மீனாட்சி எழுந்தருளினார்.
மேலும் மாடுகள் பூட்டிய சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் சொக்கநாதர் ஆவுடையம்மாள், மயில் வாகனத்தில் முருகன் வள்ளி உடனும், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில், வெள்ளிக்கிழமை கழுவன் திருவிழா நடைபெற்றது. சனிக்கிழமை திருக்கல்யாணமும், ஞாயிற்றுகிழமைத் தேரோட்டமும், திங்கள்கிழமை தீர்த்தவாரியும் நடைபெறும்.