சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் வறட்சி நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி நடந்த இந்த பிரசார இயக்கத்துக்கு ராஜாராம் தலைமை வகித்தார். பூபேஷ், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வீரபாண்டி, தாலுகா செயலர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புச்சாமி, ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஜெயந்தி, மரியசெல்வம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்தியாகு, ராஜூ, பரிசுத்தமங்களசாமி, முருகன், நாகசாமி உள்ளிட்டோர் பேசினர். மாவட்டச் செயலர் வீரபாண்டி கூறுகையில், ஜூலை 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. அதன்பின் ஜூலை 22 ஆம் தேதி சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.