காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2019 ஏப்ரலில் நடைபெற்ற இறுதிப் பருவமுறைத் தேர்வுகளில் இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக பட்டம் பெறவும், உயர்கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கும் நோக்கில் சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கே.உதயசூரியன் வெள்ளிக்கிழமை வெளியிட் டுள்ள அறிவிப்பில் கூறியது:
இச்சிறப்புத் துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பல்கலைக் கழகத்தின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பில் மாணவர்கள் இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சிபெறாத நிலையில் இச்சிறப்புத்துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தாள் ஒன்றுக்கு ரூ. 1000 வீதம் பதிவாளர்,
அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற பெயரில் இணைத்து, வரும் 22 ஆம் தேதிக்குள் அழகப்பா பல்கலைக் கழகத் தேர்வுப் பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான கடந்த 2019 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் செய்தித் தாள்கள் வாயிலாகவும், பல்கலைக்கழக இணையதளத்திலும் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கான 2019 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுகளுக்கான மறுமதிப்பீட் டிற்கு விண்ணப்பித்து மறுமதிப்பீட்டின் அடிப்படையில் சிறப்புத் துணைத் தேர்வுக்குத் தகுதி பெறும் மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தேர்வுப் பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை அந்தந்த துறைகளில் மற்றும் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மற்றும் 2-ந் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.