சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழில் கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தனித்தனியே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் நிலைக்கு ரூ.10,000 பரிசுத் தொகையும் சான்றிதழும், இரண்டாம் நிலைக்கு ரூ.7,000 பரிசுத் தொகையும், சான்றிதழும், மூன்றாம் நிலைக்கு ரூ.5,000 பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.
இந்த போட்டிகள் சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆக.9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளன. மூன்று போட்டிகளும் ஒரே நாளில் நடத்தப் பெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். இதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு போட்டி நடைபெறும் இடத்தில் சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கப்பட வேண்டும். படிவமின்றி வெறும் பரிந்துரையுடன் வரும் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.
ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே ஒரு கல்லூரியிலிருந்து முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
இதற்கு முன்பு இப்போட்டிகளில் பங்கேற்று இரண்டு முறை பரிசுகள் பெற்றிருப்பின் மீண்டும் அதே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
போட்டிகளுக்கான தலைப்புகள் நடுவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முன்னிலையில் போட்டி நடைபெறும் நேரத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது. முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநரால் பரிந்துரை செய்யப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04575 - 241487 என்ற தொலைபேசி எண்ணிலோ, 99522 80798 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.