சிவகங்கையில் ஜூலை 26 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 24th July 2019 07:04 AM | Last Updated : 24th July 2019 07:04 AM | அ+அ அ- |

சிவகங்கையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ஆர்.மணிகணேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இம்முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.