சிவகங்கை மாவட்டம் பனங்குடி அருகே பிலாமிச்சம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கோயில் முன் உள்ள மஞ்சு விரட்டு திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதையடுத்து, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 13 மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர். இதில் மாடுகள் முட்டியதில் காயமடைந்த 4 பேர் அந்தப்
பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனர்.போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை பிலாமிச்சம்பட்டி, பனங்குடி, நடராஜபுரம், கருங்குளம், காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.