சிவகங்கையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 18th June 2019 07:26 AM | Last Updated : 18th June 2019 07:26 AM | அ+அ அ- |

கொல்கத்தாவில் இளம் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் திங்கள்கிழமை கருப்பு வில்லை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளரும்,சிவகங்கை மாவட்டச் செயலருமான க.ராமு தலைமை வகித்தார். அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்ட பொருளாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை உடனே அமல்படுத்துவது மட்டுமின்றி, அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும், இந்தியா முழுவதும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. மருத்துவ சங்கத் தலைவர் பெரியசாமி தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருத்து வர்கள் ஆண்கள் 25 பேர், பெண்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.